புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)
பிட்டு பட ஹீரோவை / செக்ஸ் நடிகரை கல்லூரி சேர்மனாக நியமித்த பாஜக : போராட்டத்தில் மாணவர்கள்[1]: இப்படி தலைப்பிட்டு உரு இணைதளம் இச்செய்தியை விம்ர்சித்துள்ளது. கஜேந்திர சௌஹான் 600 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. அவர் ஆரம்பகால கட்டத்தில் நடித்த கில்மா படங்கள் தான் காரணம் என்று ஆரம்பிக்கிறது ஒரு இணைதளம். “சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர்” என்று இவரை பற்றி கூகுளில் தேடினால் அதிகம் ஷேர் ஆகும் வீடியோ ஒன்று கண்ணில் சிக்கியது[2]. வினவு தலைப்பிட்டு ஒருதலைப்படசமான விவரங்களைக் கொடுத்துள்ளது[3]. 1989-ல் ரிலீஸான “குலி கிட்கி” என்ற படத்தில் எசகுபிசகான ரோலில் டிஸ்கோ சாந்தியோடு நடித்திருக்கிறார். இதுபோன்ற மோசமான பி மற்றும் சி கிரேடு படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்கள் அசோஸியேன் தலைவராக இருந்த இவர் 2004-ல் பா.ஜ.க வில் இணைந்தார். சின்னச்சின்னதாய் பல பொறுப்புகளை வாரி வழங்கிய பா.ஜ.க அரசு இத்தனை ஆண்டு விசுவாசத்துக்கான பலனாக உயரிய மற்றும் மிகக் கௌரவமான புனே திரைப்படக் கல்லூரி சேர்மன் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இவர் நியமிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து இன்றுவரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் சேர்மனான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க ஆதரவாளர் என்பதற்காக பிட்டு பட ஹீரோவையெல்லாம் நியமிப்பதா என்ற எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.
சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார் என்று முடித்துள்ளது: இது குறித்து சௌகான் கூறுகையில், என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இங்கு படிக்கும் மாணவர்களும் 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை நான் தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் அணுகுவேன். உணர்ச்சிகளுக்கும் வெறும் கூச்சல்களுக்கும் நான் வேறுவிதமாக ரியாக்ட் செய்யமாட்டேன். நான் நடிகனாக தர்மராகவும் துரோகம் இழைக்கும் கணவராகவும் நடித்திருக்கிறேன். அது என் தொழிலில் சகஜம். இந்தப் போராட்டத்தில் மும்முரமாக எனக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் மாணவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் காத்திருக்கிறேன், ஒரு நண்பனாக என சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார்.
கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, புகாரின் பேரில், வழக்கு பதிவு, 5 பேர் கைது: புனே திரைப்பட கல்லூரிக்குள் செவ்வாய்கிழமை 18-08-2015 நள்ளிரவில் அதாவது 19-08-15 அதிகாலை 1.15 மணிக்கு புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்[4]. அவர்கள் மீது கலவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[5]. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்[6]. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 5 முதல் 17 வரை விடுதிகளில் தங்கியிருந்து ஆர்பாட்டம்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 30 முன்னாள் மாணவர்களை உடனடியாக வெளியேறும் படி நிர்வாகம் உத்தரவிட்டது, மேலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அந்த மாணவர்கள் மேற்கொண்டிருந்த பணிகளை உடனடியாக முடித்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் நடக்கும் விசயம் தான். இருப்பினும், இங்கு அரசியல் மற்றும் சித்தாந்தவாதிகளின் தாக்கம் இருப்பதினால் அரசாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-08-2015 திங்கள் இரவு மாணவர்கள் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சில மணி நேரங்கள் சிறை பிடித்தனர். இதனை அடுத்து இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை மாணவர்கள் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். 2 பெண்கள் உட்பட 17 மாணவர்கள் மீது மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தவிர 25 – 30 மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆர். -யில் இடப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது[7].
கைது செய்யப்பட்ட மாணவர்கள், பிணையில் விடுதலை (19-08-2015): மாணவர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு மாணவர்களை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரையும் ஜாமீனில் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவலில் வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நரேந்திர ஜோஷி 3 ஆயிரம் பிணைத்தொகையுடன் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்[8]. நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது[9].
அரசியலாக்கப்பட்டப் பிரச்சினையும், வலதுசாரிகளின் பலஹீனமும்: காங்கிரஸ், ஆப் முதலிய கட்சிகள் இப்பிரச்சினையில் சேர்ந்து பெரிதாக்கி விட்டுள்ளன. கம்யூனிஸ கோஷ்டிகளுக்கு இதனால் குஷியான நிலை உருவாகி விட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூடாரமாகி விட்ட இந்நிறுவனங்களை, திடீரென்று மாற்றிவிட முடியாது, ஏனெனில், பற்பல பகுதிகளில் அவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மகள்-மகன்கள், உறவினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் என்றிருக்கும் அவர்கள் தத்தமது சொந்தங்களை, தோழர்களை, ஆட்களை, ஆதரிப்பார்களே தவிர மற்றவகளை ஆதரிக்க மாட்டார்கள். திரையுலகத்திலேயே பலர் எதிர்ப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். வலதுசாரி சித்தாந்திகளுக்கு அந்த அளவு திறமை, சாமர்த்தியம் மற்றும் அணுகுமுறை முதலியவை போறாது. அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி, செயல்படும் அனுபவம் மற்றும் பிரச்சார-எதிர்பிரச்சார நுணுக்கத் திறமை முதலியவை இல்லை.
“ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஏதோ என்.டி.ஏ கூட்டாட்சி உள்ளது, பிஜேபிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற நிலைகொண்டு, ஒன்றையும் உடனடியாக சாதித்து விட முடியாது. பிஜேபி ஆட்சியில் இருந்தால், இந்துத்த்வம் பேசுவது, இல்லையென்றால் மறைந்து விடுவது போன்ற “ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பலமும் இல்லை, ஏனெனில், அவர்கள் பிஜேபி ஆட்சியில் இருந்தால் வருவார்கள், இல்லையென்றால் மறைந்து விடுவார்கள். கூட்டணியில் உள்ளபோது, கூட்டு சித்தாந்தம் வேலை செய்யும் போது, அது இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூட்டை எதிர்கொள்ள முடியாது. இது என்.டி.ஏ ஏற்கெனவே பட்ட பாடம் தான், இப்பொழுதும், அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு, முதலியவற்றை முன்னிருத்தி தேசவிரோதம், இந்திய-விரோதம், மத-அடிப்படைவாதம் முதலியவற்றை மறைத்து வேலை செய்யும் அவர்களிடம் வெளிப்படையான இந்துத்துவவாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூட சொல்லலாம்.
© வேதபிரகாஷ்
22-08-2015
[1] http://www.tutyonline.net/view/28_97394/20150722193753.html
[2] h5ttps://www.youtube.com/watch?v=f4v7Pw_ajc8
[3] htt6p://www.vinavu.com/2015/07/08/interview-with-ajayan-adat-ftii/
[4] தினகரன், புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது: கல்லூரிவளாகத்தில் பதற்றம், ஆகஸ்ட்.19, 2015; மாற்றம் செய்த நேரம்:8/19/2015 11:00:44 AM
[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1321584
[6] தினமலர், புனே: திரைப்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது, ஆகஸ்ட்.19, 2015; 03.27.
[7]மாலைமலர், நள்ளிரவில் கைது செய்யப்பட்ட 5 புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 11:34 PM IST
[8] http://www.maalaimalar.com/2015/08/19233425/5-arrested-FTII-students-get-b.html