![Front page news and headlines today](https://i0.wp.com/img.dinamalar.com/data/images_news/tblfpnnews_35387384892.jpg)
நியூயார்க் : உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
‘போர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், ‘டாப்-10’ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது. இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.
‘கராச்சியில் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது’ என்று தாவூத்தின் பின்புலம் குறித்து ‘போர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,’இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது’ என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.